புதன், 10 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1190


திருக்குறள் -சிறப்புரை :1190

பசப்பெனப்  பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.---- ௧௧0

அன்று நம்மை நயந்து தம் குறைகளைக் கூறிக் கூடிமகிழ்ந்த தலைவர், இன்று அருள் செய்யவில்லை என்று ஊரார் அலர்தூற்றவில்லை எனின், நான் மேனி எழில் அழியப்  பசப்புற்றேன் என்று பேர் பெறுதல் நன்றே.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.” ---குறுந்தொகை.

நல்ல பசுவின் இனிய பால், அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், பசுவைக் காப்போரின் கறக்கும் பாத்திரத்திலும் கொள்ளப்படாமல், பயனின்றி மண்ணில் சிந்தி அழிந்தாற்போல, வரிபடர்ந்த அல்குலையுடைய என்னுடைய மாந்தளிர் மேனி, எனக்கு அழகு தருவதாகவோ, என் தலைவனுக்கு இன்பம் பயப்பதாகவோ இல்லாமல், பசலையால் விரும்பி உண்ணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக