செவ்வாய், 30 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1230


திருக்குறள் -சிறப்புரை :1230

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர். ----- ௨ ௩0

பொருள் தேடுவதையே குறியாக்கொண்டுள்ள என் காதலரை நினைத்து வருந்தி, இந்நாள்வரை மாயாதிருந்த என் உயிர், மயக்கம்தரும் இம்மாலைப்பொழுதில் மாயும்.

கிளிபுரை கிளவியாய் நின் அடிக்கு எளியவோ
தளிஉறுபு அறியாவே காடு எனக்கூறுவீர்
வளியினும் வரைநில்லா வாழுநாள் நும் ஆகத்து
அளியென உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ.” –கலித்தொகை.

கிளியின் பேச்சைப்போல் பேசும் மொழியினை உடையவளே ; மழையே பெய்தறியாத , வெம்மை உடையகாட்டிலே , நீ நடந்து போதற்கு நின் அடி எளியவாய் இருக்குமோ என்று கூறினீர்…!
வரையறுத்துக் கூறவியலாத, நிலையாமை உடைய காற்றைப்போன்று விளங்குவது வாழ்நாள் ; நாம் கூடிவாழும் இந்நாளிலே நின் மார்பிடத்தே முயக்கத்தைக்கண்டு, அதனையே விருப்பு எனக்கொண்டு வாழ்நாளாக உடையேன் ;ஆதலால் இனி உம்மைப் பிரிந்து அவலங்கொண்டு நெஞ்சழிவனோ .? இறந்துபடுவேனே….!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக