வெள்ளி, 3 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1236


திருக்குறள் -சிறப்புரை :1236

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. ---- ௨௩௬

பிரிவாற்றாமையால் என் கைவளையல்கள் கழலவும், அழகழிய தோள்நலம் கெடவும் வருந்தும் என்னைக்கண்ட ஊரார் என் காதலர் கொடியவர் என்று தூற்றுவதைக் கண்டு , நான் மிகவும்  துன்புறுகிறேன்.

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந் தனையேம் ஆகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி மான்று பட்டன்றே
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர்திறத்து இரங்கும் நம்மினும்
நம்திறத்து இரங்கும் இவ்வழுங்கல் ஊரே.”—குறுந்தொகை.

தோழி…! வளர்கின்ற பிறையைப்போல, மேலும் மேலும் பெருக்கம் எய்தி,  தோள் சந்தில் அணிந்த வளை நெகிழ்வதற்குக் காரணமாகிய பிரிவுத் துன்பமாகிய நோயினால், தளிரைத் தேய்த்த தன்மை போல உடம்பு மெலிவுற்றது. அந்நோயைத் தீர்ப்பதற்குரிய தலைவன், நம் பக்கத்தில் இல்லாமையால், நாம் துன்பப்படுகின்றோம் . அதுவன்றியும் மழையும் பருவம் மயங்கிப் பெய்தது. இங்ஙனம், மழை பெய்வதற்கு முன்னரே, இக்கெடுதலையுடைய ஊரினர், தலைவரை எண்ணி வருந்தும் நம்மைவிட, நம் பொருட்டு அவரை பல சொல்லித் தூற்றுகின்றனரே. யான் அதற்கு ஆற்றேன்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக