சனி, 11 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1251


திருக்குறள் -சிறப்புரை :1251
126. நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. ---- ௨ ௫க

நற்குணங்களாகிய  நிறை என்னும் கதவினை,  நாணம் என்னும் தாழ்ப்பாள் இறுக்கியுள்ளபோதும் காமம் என்னும் கோடரி அதனை உடைத்தெறியும்.

"அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீடு உழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீந்து உக்காங்கு
தாங்கும் அளவைத் தாங்கி
காமம் நெரிதர கைந் நில்லாதே.” ---குறுந்தொகை

நாணம் இரங்கத்தக்கது, காமம் உற்ற நம்மொடு மிகநெடுங்காலம் உடனிருந்து வருந்தியது. இனி, அது வெல்ளிய பூவினை உடைய கரும்பினால் அமைக்கப்பட்ட நீர் ஓங்குவதற்காக இட்ட மணலை உடைய சிறிய கரையானது, இனிய நீர் பெருகியவழி அழிந்து வீழ்ந்தாற்போல, தடுக்கும் வலிமையுள்ளவரை தடுத்து நிறுத்தி, காமம் பெருகி உடைத்தபோது, ஒழுங்கிற்கு உட்பட்டு நில்லாது.
( காமம் பெருகியவழி, தனக்குக் காவலாக இருந்த நாணம் நீங்கியதோடு, தன்னுடைய பெண்மை ஒழுக்கமும் சாய்ந்தது என்றாள் தலைவி.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக