சனி, 25 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1279


திருக்குறள் -சிறப்புரை :1279

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவர்செய் தது. --- ௨ ௭ ௯

 பிரியக் கருதிய தலைவன் முன்னே வந்து நின்ற தலைவி, தன்னுடைய வளையல்களைப் பார்த்தாள், மெல்லிய தன் தோள்களையும் நோக்கினாள், பின்னர்த் தன் அடிகளையும் நோக்கி நின்றாளாகித் தானும் உடன்வருவதாகக் குறிப்பால் உணர்த்துவாளாயினாள்.

அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்
விளிநிலை கேளாள் தமியள் மென்மெல
நலமிகு சேவடி நிலம் வடுக் கொளாஅக்
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
வறிதகத்து எழுந்த வாயல் முறுவலள்
……………………………………
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு
அன்றென மொழிந்த தொன்றுபடுகிளவி
அன்னவாக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஏற்றி…..” ----அகநானூறு.

ஒளி பொருந்திய நெற்றியினளாகிய நம் தலைவி, நாம் அளி செய்யும் நிலையினைப் பெறாமல் மாறுபட்ட முகத்தினளாய், நாம் அழைத்தலைக் கேளாமலே, நாண் முதலியவற்றைத் துறந்து, மெல்ல நலமிகும் சிவந்த அடியால் நிலத்தில் வடு தோன்ற அருகே வந்து, தனது கூரிய பற்கள் தோன்ற, பொய்யான முறுவலுடன், யாம் எண்ணியதை உணரும் முன்பே, நாம் பொருள் கருதிப் பிரிதலை உடன்படாத எண்ணத்துடன்…………… காதலுடையாரைப் பிரிதல்  அறநெறியன்று என்று சொல்லுவாள் போல, அக்குறிப்பினை முகக் குறிப்பால் உரைத்து, ஓவியம்போல் நின்று,  உடன்படாமையை உணர்த்துவாளாயினள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக