செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -51

மெய்ப்பொருள் காண்பது அறிவு -51
                                வேதகால இருடிகள் இலிங்க வணக்கத்தைக் கண்டித்திருக்கின்றனர். இதனால் இருக்கு வேத காலத்தில் இலிங்க வணக்கம் ஆரம்பத்தில் இருந்ததென்று கூறமுடியாது. வேத கால இருடிகள் இலிங்க வணக்கத்தைக் கண்டித்தார்கள், அவர்களைச் சூழ்ந்து இலிங்க வணக்கம் இருந்தது. இல்லாவிடில் அவ்வாறு கண்டிக்க வேண்டியதில்லை.ஆகவே இலிங்க வணக்கம் வளர்ச்சி அடைந்திருந்தது என்று காண நாம் பிராமண காலத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. அது ஆரியரைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களிடையே நன்கு பரவியிருந்தது. மொகஞ்சதரோ காலத்திய வணக்கத்தைக் கண்டித்தவர்கள் மொகஞ்சதரோ மக்களாயிருக்க முடியாது. ஆகவே மொகஞ்சதரோ மக்கள் ஆரியராக இருக்க முடியாது. அவை இடக்கரானவை. இருக்கு வேத ஆரியர் எழுத்தைப் பற்றி அறியார்கள். ஆகவே மொகஞ்சதரோ நாகரிகம் பிற்காலத்தது எனச் சரூப் கூறுகிறார். பறவை, மீன், பூ, மனிதர், வீடுகள், கட்டில்கள், மலைகள் போன்றவற்றைக் குறிக்கும் எழுத்துக்கள் பிராமண காலத்தன என்று கூற முடியாது. இருக்கு வேத காலத்திலும் எழுத்து அறிந்தவர்கள் இருந்தார்கள். ஆரியர் கூறும் பாணியர் (Panis)  ஆரியரல்லாதவர். அவர்கள் காலத்தில் ’கிராதியர்’ எனப்பட்டார்கள். ‘கிராதின்’ என்பது எழுத்தைக் குறிக்கும். இவர்கள் வானிலை தொடர்பான கணக்கை எழுதி வைத்திருந்தார்கள். மொகஞ்சதரோ கால முத்திரைகளையும் சூமரிற்  காணப்பட்ட முத்திரைகளையும் நோக்கும்போது மொகஞ்சதரோ எழுத்துக்கள் இருக்கு வேதத்துக்கு முற்பட்டவை என நன்கு தோன்றும். தமிழர் வழங்கிய ஒருவகை எழுத்து, பட எழுத்து என, யாப்பருங்கல விருத்தியில் ஓரிடத்திற் காணப்படுகிறது.” – சிந்துவெளித் தமிழர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக