சனி, 9 மே, 2015

பாம்பு மணி உமிழும்

கட் கேள்வி-பாம்பு
யானும் ஏழ்மணி அம்கேழ் அணிஉத்தி
கண்கேள்வி கவை நாவின்
நிறன் உற்ற அராஅப் போலும்
            கோவூர்கிழார் , புறநா. : 382 : 11-14 - காண்க.126
யானும் எழுச்சியையுடய மணி, நிறம் பொருந்திய அழகிய படப் பொறி கொண்ட கண்ணாற் கேட்கும் திறன் பெற்ற பிளவுபட்ட நாக்கினை உடைய  நிறம் பொருந்திய பாம்பு தன் தோலை உரித்து நீக்கினாற்போல


பாம்பு மணி உமிழும்
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கின் ......
 எருமை வெளியனார் மகனார் கடலனார், அகநா.72: 14, 15
அச்சம் தரும் நல்லபாம்பு மேய்தற்குச் செல்ல ஒளியுண்டாக உமிழ்ந்து வைத்த மணியாகிய விளக்கில் ........
பாம்பு மணி உமிழும்
திருமணி உமிழ்ந்த நாகம் காந்தள்
கொழுமடற் புதுப்பூ ஊதும் தும்பி
நல்நிறம் மருளும் அருவிடர்
        எழூஉப் பன்றி நாகன் குமரனார், அகநா. 138: 17 – 19
தலைவன்வரும் வழி – இருள் சூழ- அவ்விருளிலே- இரை தேடும் பொருட்டு, அழகிய தன் முடியிலுள்ள மணியை உமிழ்ந்த நாகமானது கொழுவிய மடலைய்யுடைய காந்தளின் புதிய பூவினை நுகரும் நல்ல நிறத்தினைக் கொண்ட வண்டினைத் தன் மணியென மயங்கும் அத்தகைய கடும்சுர வழி (விடர்- மலைப்பிளப்பு)

பாம்புமணிஉமிழும்
அருவிதந்த அரவு உமிழ் திருமணி
பெருவரைச் சிறுகுடி மறுகுவிளக்குறுத்தலின்
        பொதும்பில்கிழான் வெண்கண்ணனார், அகநா.192:11,12
அருவி விரைந்து கொண்டு வந்த பாம்பு உமிழ்ந்த அழகிய மணி, பெரிய மலையிலுள்ள எமது சிறுகுடி உள்ள தெருவினை இருள் அகற்றி ஒளி பெறச் செய்தது.
பாம்பு உமிழ்ந்த மணி
மேய்மணி யிழந்த  பாம்பின் நீநனி
தேம்பினை வாழியன் நெஞ்சே …..
             பரணர், அகநா.372, 13, 14
மேய்தற் பொருட்டு உமிழ்ந்துவைத்த மணியினை இழந்த பாம்பைப்   போல நீ மிகவும் வாடுதலுற்றனை, ( குறிஞ்சி)

பாம்பு மணி உமிழும்
அரவு உமிழ் மணியின் குறுகார்
நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறரே
                           பெருந்தலைச் சாத்தனார், புறநா.294 :8,9
பெருந்தலை ஊர்கோவைமா
நாகப் பாம்பு உமிழ்ந்த மணியை யாரும் அணுகாது  போலப் பகைவரும் அவனை நெருங்கவில்லை. ( நாகப் பாம்பு மணியை உமிழ்ந்து அதன் ஒளியில் இரை தேடிச் சென்று அதனையே நினைந்திருக்கும் யாரேனும் மணியை அணுகினால் துன்புறுத்தும் என்பது நம்பிக்கைஅருமணி இழந்த நாகம் போன்றுசிலம்பு.புறஞ்..கா.58 காண்க.)


1 கருத்து:

  1. சங்ககாலம் முதல் 19் ஆம நூற்றாண்டு வரை இந்த எண்ணம் இருந்தது. அறிவியல் பூர்வமாக மூடநம்பிக்கை. வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள், மனோன்மணீயம் ஆகியவற்றில் நிறைய உண்டு. பாம்பு நிலவினை விழுங்கஜதல் போன்ற கருத்துக்கள் நிறைய உள்ளன

    பதிலளிநீக்கு